கடந்த 20 வருடங்களாக மூடப்பட்டிருந்த மட்டக்களப்பு – கல்முனை இடையிலான ஏ- 4 நெடுஞ்சாலை இன்று முதல் மீண்டும் பொதுப் போக்குவரத்திற்காக முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக மட்டக்களப்புக்கும் கல்முனைக்குமிடையில் மேற்படி நேரடிப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இதன் காரணமாக இவ்வழியான போக்குவரத்து வேறு குறுக்குப் பாதைகள் ஊடாக இடம்பெற்று வந்தமையினால் பொது மக்களும், வாகன சாரதிகளும் சிரமங்களையும் தாமதங்களையும் எதிர்நோக்கி வந்தனர். தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்(கருணா அம்மான்) பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வந்ததையடுத்து இன்று காலை அமைச்சரினால் நேரடி போக்குவரத்துத் திறந்து வைக்கப்பட்டது. குறிப்பிட்ட உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் விசேட அதிரடிப் படை முகாம், பொலிஸ் நிலையம் ஆகிய பாதுகாப்பு நிலைகளுடன் ஸ்ரீ லங்கா டெலிகொம் மற்றும் வலய கல்வி அலுவலகம் போன்றவையும் அமைந்துள்ளன. பாதையை திறந்து வைத்த பின் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்(கருணா அம்மான்) இந்த பகுதிக்குள் அமைந்துள்ள பொதுக் கட்டிடங்கள் (நீதிமன்றம், தபால் நிலையம், நீர்ப்பாசனத் திணைக்களம்) உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுக் கட்டிடங்களிலுமுள்ள படை முகாம்கள் வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது
Filled Under: செய்திகள்



